அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

எண்: 321
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கொல்லாமை (Not killing)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)

மு.வரதராசனார்: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா: அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

மு.கருணாநிதி: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்